<p>சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் வழியில் நடு நிசியில் நாலு முறை
இறக்கி விட்டுப் பைகளைக் களைந்து சோதனையிட்டப்பின் தொடர்ந்து செல் எனச்
சொன்னால் தங்களுக்கு எப்படி இருக்கும்?</p>
<p>தன்விடுதலைக்காக இன்னுயிரீயத் துணியும் மலையொத்த மாவீரம் வாழும்
நாட்டில் இவையெல்லாம் மடுவினும் குறைந்து மண்ணிலும் சிறிதென நினைத்துக்
கொண்டே மென்விடுதலையைப் பறைசாற்றப் போயிருந்தோம் இலங்கைக்கு, அனுதினமும்
இவ்விடர் படும் மக்களைப் பற்றியச் சிந்தனை ஒரு புறமிருக்க.</p>
<p>கொழும்பு நகரிலிருந்து பத்துமணித் தியாலத்துக்கும் குறைவானப் பயணம்.
கண்டி அம்பாறையெல்லாம் கடந்து நிற்கும் சம்மாந்துறை. சற்றே புறந்தள்ளி
இருக்கும் ஒலுவில் எனும் ஊரிலமைந்திருக்கும் தென்கிழக்கிலங்கைப் பல்கலைக்
கழகத்தின் கணினிக் கிளையிருக்கும் துறை.</p>
<p>திசம்பர் திங்கள் முதல் நாள் வைகறையில் அப்பல்கலைக் கழக விருந்தினர்
விடுதியில் வந்திறங்கி காலைச் சிற்றுண்டியினை முடித்து விட்டு,
பயிலகத்துக்கு விரைந்தோம்.</p>
<p>முந்தைய தினமே சகாக்கள் சிலரது துணையுடன் முன்னேற்பாடுகளைக் கவனித்திருந்தார் <a href="http://tamilgnu.blogspot.com/" target="_blank">மயூரன்</a>. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒருங்கிணைப் பாளர்கள் என அனைவரிடமும் சிறியதொரு அறிமுகத்துக்குப் பின் பட்டறைத் துவங்கியது.
</p>
<p>முறையான துவக்கத்துக்குப் பின் முதலுரையாற்ற வந்தவர் புத்த முனி மெத்த
விகாரி. பின்னொரு கேள்விக்கு அவரளித்த உரையில் குனு/ லினக்ஸினைத் தாம்
பாவிக்கக் காரணமாக கூறியக் காரணங்கள் இரண்டு.</p>
<p>அவரோ பிச்சை எடுத்து வாழும் பௌத்த பிக்கு. சமயத் தேவைகளின் பொருட்டு
தாம் கணினி பாவிக்க முற்பட்டபோது கிடைத்த இயங்கு தளத்தின் விலை,
துறவியொருவரின் தீண்டுதலுக்கு மிகத் தொலைவிலிருந்ததாம்.</p>
<p>மீறிப் பிறருதவிப் பெற்று வாங்கிக் கொண்டாலும், பற்றற்று இருக்கும்
தம்மிடம் வட்டின் நகலொன்றை எமக்கு கொடுங்கள் என யாராவது வினவினால், உரிமம்
சொல்லும் காரணத்தினால் பகிர்ந்து கொள்ள இயலாது எனப் பகறும் நிலை.</p>
<p>பற்றற்றவன் பகிர்ந்து கொள்ளாது இருத்தல் ஆகுமா? பற்றற்றவன் உரிமைக்
கோரும் ஒன்றும் இருத்தல் தகுமா? இயலாது! கூடாது! அது அறத்துக்கும்
ஒவ்வாது! எனும் முடிவு கொண்டு முதன் முதலாக ஸ்லாக்வேர் (<a href="http://www.slackware.com/" target="_blank">http://www.slackware.com/</a>) பாவிக்கத் துவங்கினாராம்.</p>
<p>அனுபவம் தொடரும்…</p>
<p>பி.கு: பரவை - கடல். இலங்கையில் பழக்கத்திலுள்ள சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டுபிடிங்க பார்க்கலாம் <img src="http://amachu.net/blog/wp-includes/images/smilies/icon_wink.gif" alt=";-)" class="wp-smiley"> </p>
<p>நிழற்படங்களுக்கு: <a href="http://amachu.net/kadambam/main.php?g2_itemId=89" target="_blank">http://amachu.net/kadambam/main.php?g2_itemId=89</a><br></p>-- <br>அன்புடன்,<br>ஆமாச்சு.<br><a href="http://amachu.net">http://amachu.net
</a><br><br>வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!<br>வாழிய பாரத மணித்திரு நாடு!